கைப்பற்றப்படும் வெடிபொருட்கள் வெலிசரை கடற்படை முகாம் ஊடாக விநியோகிக்கப்பட்டவை – அதிர்ச்சி தகவல் வெளியானது!

நாட்டின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அதிகளவான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.
கைப்பற்றப்படும் வெடிபொருட்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் பியல் டி சில்வா இவ்வாறு சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கல்குவாரிகள் தொடர்பாக சட்ட ரீதியாக விநியோகிக்கப்படும் வெடி மருந்துகள், முறையற்ற விதத்தில் மூன்றாம் தரப்பினரின் கைகளுக்கு கிடைத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு இவ்வாறு விநியோகிக்கப்பட்ட சட்ட ரீதியிலான வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதக பாரிய சந்தேகம் நிலவுகின்றது.
அனுமதிப்பத்திரம் உள்ளவர்களுக்கு இவ்வாறு விநியோகிக்கப்பட்ட வெடி பொருட்களில் ஒரு தொகை தவறான வழியில் பயங்கரவாதிகளின் கைகளுக்கு கிடைத்திருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக அது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்.
குண்டுவெடிப்பை தொடர்ந்து நாட்டில் இடம்பெறும் சோதனை நடவடிக்கைகளின் போது, வோட்டர் ஜெல், டெட்டனேடர், சேப்ட் பியூஸ், போன்ற வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவை அனுமதி பத்திரம் உள்ளவர்களுக்கு வெலிசரை கடற்படை முகாம் ஊடாக விநியோகிக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளதாகவும்’ அவர் குறிப்பிட்டுள்ளார்.