யாழில் பற்றி எரிந்த வணிக நிலையம் – கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதம்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி நகரில் வணிக நிலையம் ஒன்று தீயில் விபத்துக்குள்ளாகியது. அங்கிருந்த சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் தீக்கிரையகியுள்ளன.
சாவகச்சேரி ஏ9 வீதியில் உள்ள வணிக நிலையத்திலேயே இன்று (வியாழக்கிழமை) இரவு 6.45 மணியளவில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டது.
இதற்கு மின்சார இணைப்பில் ஏற்பட்ட ஒழுக்கே காரணம் எனத் தெரிவிக்கப்பட்ட போதும் விசாரணைகளின் பின்னரே காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என பொலிஸார் கூறியுள்ளனர்.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பொதுமக்களுடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரும் இணைந்தனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
மேலும் அருகில் உள்ள பாதணிகள் விற்பனை நிலையத்துக்கும் தீ பரவியபோதும் சுமார் 35 நிமிடங்களில் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.