“2009இல் போர் முடிவடைந்த பின்னர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ – மூனுடன் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படும் என்று இணங்கியமையே இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைக்குக் காரணம். இதனால், அதன்போது இணங்கியவாறு செயற்படுவதைத் தவிர இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இருந்து தப்பிக்க வேறு வழியில்லை.” – இவ்வாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
‘ஐ.நா. மனித உரிமைகள் விவகாரத்தை தற்போதைய அரசு முறையாகக் கையாளுகின்றது என்று கருதுகின்றீர்களா?’ என்று அந்த நேர்காணலில் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
அதன்போது பதிலளித்த அவர், இலங்கை எந்தவொரு நாட்டுடனும் சண்டையிடாது இந்த விடயத்தைக் கையாள வேண்டும் என்று தெரிவித்தார்.
தற்போது இலங்கை இந்தளவுக்கு நெருக்கடி நிலைமையை சந்திக்க போர் முடிவடைந்த பின்னர் அப்போதிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், ஐ.நா. செயலாளர் நாயமும் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இணங்கிய விடயங்களே காரணமாகும் என்றும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
அன்று மஹிந்த ராஜபக்ச மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்படும் என்று கூறியிருக்காவிட்டால், தற்போதுள்ள அழுத்தங்கள் இருந்திருக்காது என்றும் ரணில் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் கடந்த நல்லாட்சி அரசின்போது, சர்வதேச சமூகத்துடன் எந்தவொரு பிரச்சினையையும் ஏற்படுத்திக்கொள்ளாது செயற்பட்டோம். இதன்மூலம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையையும் அதிகரித்துக்கொள்ள முடியுமாக இருந்தது எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், முன்னைய ராஜபக்ச அரசு, ஐ.நா. செயலாளர் நாயகத்துடனான கூட்டு அறிக்கைக்குக் கட்டுப்பட்டுள்ளதால், அதனைச் செய்யாது அழுத்தங்களில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் ரணில் விக்கிரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.