பிரான்சிலுள்ள போர் நினைவிடம் ஒன்றில் சிகரெட் பற்றவைத்த நபர் ஒருவரின் பிரெஞ்சுக் குடியிருப்பு அனுமதியை அதிகாரிகள் பறித்துள்ளார்கள்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள Arc de Triomphe என்னும் இடத்தின் கீழ் அறியப்படாத போர் வீரனுடைய கல்லறை என்னும் போர் நினைவிடம் ஒன்று உள்ளது.
அங்கு எப்போதும் தீபம் ஒன்று எரிந்துகொண்டே இருக்கும்.
செவ்வாயன்று, அந்த போர் நினைவிடத்திலுள்ள தீபத்தில் மொராக்கோ நாட்டவரான ஒருவர் சிகரெட் பற்றவைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Bruno Retailleau தெரிவித்துள்ளார்.
துறைசார் அமைச்சரான Patricia Miralles, நாட்டுக்காக உயிர் நீத்த பல்லாயிரம் போர்வீரர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அந்த நினைவிடம் சிகரெட் பற்றவைப்பதற்காக அல்ல என்று கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பல்வேறு அமைச்சர்கள் முதலானோர் அந்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மொராக்கோ நாட்டவரான அந்த நபரின் பிரெஞ்சுக் குடியிருப்பு அனுமதி பறிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.