நாட்டை மீட்டெடுக்க சர்வகட்சி அரசாங்கமே தேவையானது. அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகளும் தமது கட்சிகளை வளர்ப்பதை விடுத்து சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து நாட்டை வளப்படுத்த வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
”தற்போதைய ஆட்சியில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற பேதம் இருக்க கூடாது. அதேவேளை சிறுபான்மை கட்சியினர், பெரும்பான்மை கட்சியினர் என்ற பேதமும் இருக்கக் கூடாது.
தமிழ் – முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அனைத்தும் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். அரசாங்கத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கவேண்டும்.
நாடு தற்போது நெருக்கடியான நிலைமையை சந்தித்துள்ளது அதிலிருந்து மீண்டெழ வேண்டும்.
இந்த நிலையில் மக்கள் பிரதிநிதிகள் தங்களுடைய கட்சிகளை வளர்ப்பதை நோக்கமாக கொள்ளாமல் நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி தீர்க்கமான முடிவு எடுத்து சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.