அமெரிக்கா – நியூயோர்க் நகரில் இடம்பெற்ற கார் விபத்தில் மூன்று இந்திய மாணவர்கள் பலியான நிலையில், ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் பிரேம்குமார் ரெட்டி கோடா (27), பவானி குல்லப்பள்ளி (22) மற்றும் சாய் நரசிம்ம பட்டம்செட்டி (22) என இந்திய துணைத் தூதரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சென்ற கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக பெர்க்ஷயர் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து அதிகாலை 5.30 மணியளவில் நடந்துள்ளதாகவும், காரில் இருந்த மற்ற பயணிகளான மனோஜ் ரெட்டி டோண்டா (23), ஸ்ரீதர் ரெட்டி சிந்தகுண்டா (22), விஜய் ரெட்டி கம்மலா (23), ஹிமா ஐஸ்வர்யா சித்திரெட்டி (22) ஆகியோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன்போது விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெர்க்ஷயர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், காரில் இருந்த 6 பேர் நியூ ஹெவன் பல்கலைக்கழக மாணவர்கள் எனவும் மற்றும் ஒருவர் சேக்ரட் ஹார்ட் பல்கலைக்கழக மாணவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.