கனடாவில் மாணவர் கடன் தொகைகளுக்கான வட்டியை ரத்துச் செய்வதற்கு சமஷ்டி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் மாணவர் கடன் தொகைகள் மற்றும் பயிலுநர் கடன் தொகைகளுக்கு வட்டி அறவீடு செய்வதனை முற்று முழுதாக நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் மாகாண மட்டத்தில் மாணவர் கடன் தொகை பெற்றுக்கொண்டவர்கள் மாகாண ரீதியிலான வட்டி வீதங்களுக்கு உட்பட்டு கடனைச் செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த கடன் வட்டி விகித சலுகையானது சமஸ்டி அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது பல்கலைக்கழக பட்டங்களை பெற்றுக் கொள்வதற்கு மாணவர்களுக்கு உறுதுணையாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1.8 மில்லியன் கனேடியர்கள் அல்லது கனேடிய மாணவர்கள் மத்திய அரசாங்கத்திற்கு 20.5 பில்லியன் டொலர்கள் கடன் செலுத்த வேண்டியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பெறப்பட்ட கடன் தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கடன் வட்டி வீத ரத்து திட்டம் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல் காலத்தில் அரசாங்கம் வட்டி வீதங்களை ரத்துச் செய்வதாக உறுதிமொழி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.