மின் கட்டணம் அதிகரிப்பு மற்றும் மின்வெட்டு காரணமாக இந்த வருடம் நாடு முழுவதும் ஹர்த்தால் பிரச்சாரம் நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அவ்வாறானதொரு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டால் அதற்கு தொழிற்சங்க கூட்டமைப்பு ஆதரவளிக்கத் தயார் என அதன் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலத் தெரிவித்தார்.
மின்கட்டணத்தை உயர்த்தினால், கண்டிப்பாக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும் என்றும், அதற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கட்டாயம் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு போதுமான நிலக்கரி இருப்பதாகவும், 38 நிலக்கரி கப்பல்கள் வந்திருக்க வேண்டும் என்றும், ஆனால் இதுவரை அதிகபட்சமாக ஆறு கப்பல்களே வந்துள்ளன என்றும் கூறுவது முற்றிலும் தவறானது என்றும் அவர் கூறினார்.
மின்வெட்டு நாட்டில் பாரிய பிரச்சினையாக இருப்பதால் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்கு செல்ல நேரிட்டது எனவும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இதே நிலை ஏற்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
