மட்டக்களப்பு – கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் வித்துடல்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாடமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் மாவீர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழுவின் தலைவர் லவக்குமார் தலைமையில் இன்று காலை தரவையில் நடைபெற்றது.
நேற்றைய தினம் இராணுவத்தினரால் நடப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டு வன இலாகா திணைக்களத்தினரால் புதிதாக பெயர் பலகை இடப்பட்ட நிலையில் போராட்டக்காரர்களால் இன்று உடைத்தெரியப்பட்டுள்ளது.
தரவை மாவீரர் துயிலும் இல்லமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதானமான மாவீரர் துயிலும் இல்லமாக கருதப்படுகின்றது. தொடர்சியாக கார்த்திகை 27ம் நாளில் மாவீரர் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தினை ஆக்கிரமிக்கும் நோக்குடன் இராணுவமும் அரச புலானாய்வு துறையும் இணைந்து மரநடுகையை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாவீரர் துயிலும் இல்லத்தினை மக்களிடம் வழங்க கோரியும், இராணுத்தினரை பிரதேசத்தில் இருந்து வெளியேறுமாறும் கோசங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேந்திரன் ,மட்டு மாநகர முதல்வர் தி.சரவணபவன், ஏறாவூர்பற்று பிரதேச சபை தவிசாளார் சர்வானந்தா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட அமைப்பாளார் த.சுரேஸ், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.