ரொறன்ரோ பகுதியில் பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு – மாணவன் காயம்
கனடாவின் ரொறன்ரோ பகுதியில் பாடசாலைக்குள் புகுந்து மர்ம நபர் துப்பாக்கிச் சூடு முன்னெடுத்ததில் மாணவர் ஒருவர் காயங்களுடன் தப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ரொறன்ரோவில் அமைந்துள்ள Weston Collegiate Institute பாடசாலை வளாகத்திலேயே பகல் 12 மணி கடந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ரொறன்ரோ மாவட்ட பள்ளி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்டவர் தொடர்புடைய பள்ளியில் படிக்கும் மாணவர் என்பதை உறுதிப்படுத்தியது. மட்டுமின்றி, ஒரு மாணவர் காயங்களுடன் தப்பியுள்ளார், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
சம்பவத்தை அடுத்து மாணவர்கள் அனைவரையும் அருகாமையில் அமைந்துள்ள வெஸ்டன் மெமோரியல் ஜூனியர் பப்ளிக் பள்ளி மற்றும் CR மார்ச்சண்ட் நடுநிலைப் பள்ளிகளுக்கு பத்திரமாக மாற்றியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, துப்பாக்கிச் சூடு முன்னெடுத்த சந்தேக நபர் அப்பகுதியில் இருந்து மாயமாகியுள்ளதாகவும், முதற்கட்ட விசாரனை முடியும் வரையில், தாக்குதல்தாரி தொடர்பில் தகவல் எதையும் வெளியிடுவதில் சிக்கல் இருப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும், உடனடியாக அவசர நடவடிக்கையின் ஊடாக அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தகவல் அறிந்து பாடசாலை வளாகத்தில் திரண்ட பெற்றோர்கள், அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். நடந்த சம்பவம் பயத்தையும் நடுக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், தம்மால் நம்ப முடியவில்லை எனவும் பெண்மணி ஒருவர் தெரிவித்துள்ளார்.