மெக்சிகோ நாட்டில் ஜலிஸ்கோ பகுதியிலுள்ள பள்ளத்தாக்கில் மனித உடல் உறுப்புகளுடன் 45 பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 20ஆம் திகதி முதல் காணாமல்போன 30 வயதுடைய 2 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் என 7 பேரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.
குறித்த 7 பேரும் வெவ்வேறு நாட்களில் காணாமல் போனதும், இருப்பினும் இவர்கள் 5 பேரும் ஒரே கால் சென்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தது புலனாய்வு விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில், பெரிய தொழில்துறை மையமான குவாடலஜாராவின் புறநகர்ப் பகுதியில் ஜபோபன் நகராட்சியில் 40 மீட்டர் (120 அடி) பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை (30-05-20230 அன்று மனித உடல் உறுப்புகள் கொண்ட 45 பைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் கூறுகையில்,
” 45 பைகளில் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் சொந்தமான மனித உடல் உறுப்புகள் இருந்தன. தடயவியல் நிபுணர்கள் மனித உறுப்புகளின் அடையாளங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.
ஆனால், இவை கண்டுபிடிக்கப்பட்ட அதே பகுதியில்தான் சம்பந்தப்பட்ட கால் சென்டரும் இயங்கி வருகிறது.
இதன் முதற்கட்ட விசாரணையில், கால் சென்டர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது.
மேலும், இதுதொடர்பான முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக மாற்ற கால் சென்டர் நிறுவன அதிகாரிகள் முயல்வதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.