News

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்.. உருக்குலைந்த கட்டிடங்கள்: மியான்மரில் பலி எண்ணிக்கை 163 ஆக உயர்வு

 

தாய்லந்து தலைநகர் பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த கட்டிடடம் இடிந்து விழுந்ததால், ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. சிறிது நேரத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்டை நாடுகளான வியட்நாம், மலேசியா, வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.

 

நிலநடுக்கம் காரணமாக, மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. தாய்லந்து தலைநகர் பாங்காக்கில் மிகப்பெரிய கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது. புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மியான்மரின் மாண்டலே நகரில் உள்ள ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் சுமார் 20 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

கட்டிடங்கள் இடிந்து விழுந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.

 

 

 

இந்தநிலையில், மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 163 பேர் உயிரிழந்ததாகவும் 700க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் 4 பேர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தாய்லாந்தில் 81 பேர் இடுபாடுகளில் சிக்கி உள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top