கனடாவில் அடுத்த பொதுத் தேர்தல் ஏப்ரல் 28, திங்கள்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது,
ஏப்ரல் மாதத்தில் தேர்தல் முன்னெடுக்கப்பட இருப்பதால், ஞாயிறன்று பிரதமர் மார்க் கார்னி கவர்னர் ஜெனரலை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமரின் திட்டங்களை நேரடியாக அறிந்த ஒரு வட்டாரத்தின் தகவல்கள் அடிப்படையில், பிரதமர் கார்னி ஏப்ரல் 28 ஆம் திகதி தேர்தல் நடத்தவிருப்பதாக அறிவிப்பார் என்றே தெரிய வந்துள்ளது.
எதிர்க்கட்சிகள், விரைவில் லிபரல் அரசாங்கத்தை வீழ்த்துவதாக சபதம் செய்துவரும் நிலையில், அரசியல் நெருக்கடியை தவிர்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை தேர்தல் திகதி அறிவிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
சட்டப்படி, ஒரு பொதுத் தேர்தல் பரப்புரைகள் என்பது குறைந்தது 37 நாட்கள் நீடிக்க வேண்டும். மேலும் சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், பிரதமர் கார்னியின் தலைமையின் கீழ் லிபரல் கட்சி கன்சர்வேடிவ் கட்சியை விட தங்கள் முன்னிலையை அதிகரித்துள்ளனர் என்றே தெரிய வருகிறது.
இந்த வாய்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள லிபரல் அரசாங்கம் தேர்தலை அறிவிக்க உள்ளது. சமீபத்திய கருத்துக்கணிப்பில் தீர்மானிக்கப்பட்ட வாக்காளர் ஆதரவில் லிபரல்கள் 42 சதவீதத்தைப் பெறுவார்கள் என்றும் கன்சர்வேடிவ் கட்சிக்கு 36 சதவீதம் ஆதரவு எனவும் தெரிய வந்துள்ளது.
வெறும் மூன்றே வாரத்தில் 7 சதவீத முன்னிலையை லிபரல் கட்சி பெற்றுள்ளது. மட்டுமின்றி, மக்கள் ஆதரவு அதிகம் கொண்ட அரசியல் தலைவராகவும் மார்க் கார்னி உருவெடுத்துள்ளார்.
48 சதவீத மக்கள் ஆதரவை அவர் பெற்றுள்ளார். 30 சதவீதம் மட்டுமே அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஆனால் கன்சர்வேடிவ் கட்சியின் Pierre Poilievre-க்கு ஆதரவாக 35 சதவீதமும் எதிராக 52 சதவீதமும் வாக்களித்துள்ளனர்