தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம் என்று அழைக்கப்படும் சட்டமூலம் 104 ஐ எதிர்த்து இலங்கை குழுக்கள் தாக்கல் செய்த வழக்கை கனேடிய உச்ச நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளதாக ஒன்ராறியோ மாவட்ட சட்டமற்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் (Vijay Thanigasalam) தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டம் ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதியையும் ஒன்ராறியோவில் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் கிழமையாக குறிப்பிடப்படுகிறது.
மே 2009 இல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதிக் கட்டங்களில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களை நினைவுகூரும் நேரமாக இது அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு ஒன்ராறியோ சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த 104 சட்டத்தை ரத்து செய்யும் முயற்சியில் பல சிங்கள அமைப்புகளால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த முயற்சிகள் தமிழர் துன்பங்களை அழிக்கவும் அங்கீகாரத்தைத் தடுக்கவும் நோக்கமாகக் கொண்ட மறுப்பு பிரச்சாரம் என்று தமிழ் கனேடிய அமைப்புகளும் சட்ட வல்லுநர்களும் பரவலாகக் கண்டனங்களை வெளியிட்டு வந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், ஒன்ராறியோ நீதிமன்றங்களில் இந்தச் சட்டத்தை ரத்து செய்வதற்காக, தொடர் தோல்வியடைந்த சட்ட முயற்சிகளைத் கருத்தில் கொண்டு, கனேடிய உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சட்டமற்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம், இது கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியென தெரிவித்துள்ளார்.
அத்தோடு, முதல்வர் டக் போர்ட், தனது சட்டமன்ற சகாக்கள், 60க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் குறிப்பாக மசோதா 104ஐப் பாதுகாக்க அயராத முயற்சிகள் எடுத்த தமிழ் இளைஞர்களுக்கும் தான் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடா உச்ச நீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பானது, இழந்த அப்பாவி உயிர்களை அங்கீகரிப்பதாகவும் தமிழ் இனப்படுகொலைக்கான நீதிக்கான உலகளாவிய இயக்கத்தில் ஒரு மைல்கல்லாக செயல்படும் என்றும் விஜய் தணிகாசலம் மேலும் கூறியுள்ளார்.