அமெரிக்காவில் கல்வி கற்று வரும் நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர்களை வெளியேறுமாறு குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சர்வதேச மாணவர்களுக்கான F-1 விசா இரத்து செய்யப்பட்டுள்ளதன் காரணமாக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளிவிவகாரத் துறையில் இருந்தே மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தாமாகவே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி வளாகங்களில் அவர்களின் நடவடிக்கைகளை குறிப்பிட்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்லூரி வளாகங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மாத்திரமன்றி, நடந்த சம்பவத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்த மாணவர்கள், அந்த சமூக ஊடகப் பதிவை விருப்பம் தெரிவிப்பதாக அடையாளப்படுத்திய மாணவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் ட்ரம்ப் நிர்வாகத்தால் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில், சமூக ஊடக பதிவுகளை பகிர்ந்த, போராட்டங்களில் கலந்து கொள்ளாத இந்திய மாணவர்களும் சிக்கியுள்ளனர். வெளியான தரவுகளின் அடிப்படையில் 2024 மற்றும் 2024 கல்வியாண்டில் 1.1 மில்லியன் சர்வதேச மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி கற்று வருகின்றனர்.
அவர்களில் 3.31 இலட்சம் மாணவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டு பல சர்வதேச மாணவர்களின் விசாக்கள் இரத்து செய்யப்படுவது குறித்து அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிவிப்பை அடுத்தே, தற்போது மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
300 மாணவர்களுக்கு மேல் முதற்கட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் நடவடிக்கைகள் தொடரும் என்றும் மார்கோ ரூபியோ காட்டமாக பதிலளித்துள்ளார்.
அதன்படி, ஒரேயடியாக 300 விசாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் மாணவர்கள் மற்றும் சுற்றுலாவுக்கு வந்தவர்களும் உட்படுவார்கள் என மார்கோ ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, தற்போது மின்னஞ்சல் கிடைக்கப் பெற்ற மாணவர்கள் அனைவரும் தாமாகவே நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இல்லையேல் விதிகளை மீறும் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்கள் குற்றவாளிகள் போல நாடுகடத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் ட்ரம்ப் நிர்வாகம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது