தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 24 பேர் பலியாகினர்; பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 27,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவின் தெற்கு பகுதிகளில் வறண்ட வானிலை காரணமாக அங்குள்ள வனப்பகுதிகளில் சமீபத்தில் தீப்பிடித்தது.
இத்துடன் பலத்த காற்று வீசியதால், தீ பரவியது. இதன் காரணமாக, அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் உள்ள ஹன் டோங் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
தகவலறிந்து வந்த மீட்புக்குழு, தீயணைப்புப் படையினருடன் இணைந்து அப்பகுதிகளில் சிக்கிய நபர்களை கண்டறிந்து மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஹன் டோங் நகரைச் சுற்றியுள்ள நகரங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை, பாதுகாப்பாக வெளியேற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கிடையே, காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஹெலிகாப்டர்கள் உதவியுடன், மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர்.
இதுவரை, காட்டுத்தீயால் 43,000 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி மற்றும் 1,300 ஆண்டுகள் பழமையான புத்த கோவில் உட்பட ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன.
இதுவரை, காட்டுத்தீயில் சிக்கி 24 பேர் பலியாகி உள்ளனர். இதில், நான்கு பேர் தீயணைப்புப்படையைச் சேர்ந்த வீரர்கள் என தெரியவந்துஉள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 27,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளன.
உய்சோங் நகரத்துக்கு அருகில் சியோங்சாங் கவுன்டியில் உள்ள சிறைச்சாலையில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500 கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காட்டுத்தீ, மனித தவறுகளால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். கல்லறைகளில் துாய்மை செய்யும்போது, புல்லை அகற்றி அதற்கு தீ வைத்து இருக்கலாம், அல்லது வெல்டிங் செய்யும் போது ஏற்பட்ட தீப்பொறிகளால், இந்த காட்டுத்தீ பரவி இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.