”ஈரானுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். வரும் சனிக்கிழமை ஈரானுடன் மிகப்பெரிய உயர்மட்ட சந்திப்பு நடைபெறும்” என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023ல் இஸ்ரேல் மீது பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. ஏராளமானவரை பிணைக்கைதிகளாகவும் பிடித்துச் சென்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் தொடங்கிய தாக்குதல் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
டிரம்ப் பதவியேற்ற பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டு பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் ஒப்பந்தத்தை முழுமையாக ஹமாஸ் பின்பற்றவில்லை என்று கூறி இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கிவிட்டது.
இந்நிலையில், அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது: காசா போர் நிறுத்தப்படுவதை நான் காண விரும்புகிறேன். போர் ஒரு கட்டத்தில் நின்றுவிடும் என நான் நினைக்கிறேன். அது மிக அதிக தொலைதூரத்தில் இல்லை.
ஹமாஸால் பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காசா மக்கள் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்ல வேண்டும். அவர்கள் ஹமாஸ் படையினருக்காக பயந்து செல்வதை நிறுத்த வேண்டும். ஈரானுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்.
வரும் சனிக்கிழமை ஈரானுடன் மிகப்பெரிய உயர்மட்ட சந்திப்பு நடைபெறும். அணுசக்தி திட்டம் குறித்து விவாதம் துவங்கி உள்ளது. இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்