இறுதிப்போரில் ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்படமைக்கும் பல நூற்றக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்குமுரிய முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டிய ஒருவராக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இருக்கின்றார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் (S.Kajendren) தெரிவித்துள்ளார்.
ஜேவியினுடைய தலைவராக இருக்கும் அநுரகுமார திசாநாயக்க தமிழ் மக்கள் மீது இடம்பெற்ற இனப்படுகொலையின் பங்காளி எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (16 ) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன் இனப்படுகொலையின் சூத்திரதாரி, மிகக் கொடூரமான கொலைகளுக்கு பொறுப்பாளிாக இருக்கக்கூடிய அநுரகுமார திசாநாயக்க தேசிய மக்கள் சக்தி சார்பாக அற்ப சலுகைகளுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக யாழில் இடம்பெறவுள்ள கூட்டமொன்றுக்கு வருகின்றார் என தெரிவித்தார்.
இதேவேளை உள்ளூராட்சி தேர்தலில் யாருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும், அநுர அரசினால் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை, கொடூரமான பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை, யாழ் போதனா வைத்தியசாலைக்கு கிடைக்கவேண்டிய காணியை தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தராஜாவும் ஆளுநரும் அதிகாரம் இருந்தும் ஏன் மீட்கவில்லை என்பன குறித்து கருத்து வெளியிட்டார்.