அமெரிக்காவில் உள்ள பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயமடைந்தனர்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியாவில் புகழ்பெற்ற பேர்மவுண்ட் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நேற்று இரவு 10.30 மணியளவில் பூங்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.,யும் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார்? என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.