இலங்கை அரசாங்கம் உடனடியாக கனேடிய உயர் ஸ்தானிகரை அழைத்து இனப்படுகொலை நினைவுச் சின்னம் தொடர்பான இலங்கையின் அதிருப்தியை தெரிவிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
கனடாவில் (Canada) உருவாக்கப்பட்டுள்ள “தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி” தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர், “இலங்கை இராணுவத்திற்கு எதிராக விடுதலைப் புலி பயங்கரவாதிகளுடனான மோதலில் எந்த இனப்படுகொலையும் சர்வதேச சட்டத்தின் கீழ் நிரூபிக்கப்படவில்லை.
அல்லது நிரூபிக்கப்பட முடியாத நிலையில், கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தைத் திறந்து வைத்துள்ளது கவலைக்குரியது.
இலங்கை அரசாங்கம் உடனடியாக கனேடிய உயர் ஸ்தானிகரை அழைத்து, முறையாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.
ஒரு சட்டபூர்வமான போரின் பின்னணியில் ஒரு தவறான இனப்படுகொலைக் கதையை ஊக்குவிப்பது வரலாற்றைத் திரிபுபடுத்துவது மட்டுமல்லாமல், இலங்கையில் நல்லிணக்க செயல்முறைக்கு கடுமையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த நினைவுத்தூபி தொடர்பில் அறிக்கை ஒன்றை கோருவதற்கு எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.