மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
அதேபோல், கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் செயலில் ஈடுபடும் ‘பண்டிட்ஸ்’ என்ற கடத்தல் கும்பல்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்டிட்ஸ் கடத்தல் கும்பலை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் இமோ மாகாணம் ஒஹிவி-ஒவிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பயங்கர துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்றது. வாகனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்த தாக்குதலை பயப்ரா பழங்குடியின மக்கள் கிளர்ச்சிப்படை என்ற அமைப்பு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.