காஷ்மீரில் இந்தியாவின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் எச்சரித்துள்ளார்.
ஒபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், காஷ்மீர் பகுதியில் உள்ள 9 இலக்குகளை குறிவைத்து, இந்திய இராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.
கோட்லி, பஹ்வால்பூர், முஸாஃபர்பாத் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்களைக் குறிவைத்து, எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று இந்திய மத்திய பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவித்தனர்.
இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கருத்து தெரிவித்து பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், தந்திரமான எதிரி பாகிஸ்தானில் ஐந்து இடங்களில் கோழைத்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தியா திணித்த இந்த போர் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமை உண்டு. அதற்கு தகுந்த பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஒட்டுமொத்த நாடும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு துணை நிற்கிறது. பாகிஸ்தானுக்கும், நம் ராணுவத்துக்கும் எதிரியை எப்படி கையாள்வது என்று தெரியும். எதிரியின் தீய நோக்கங்களை ஒருபோதும் வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம் என பிரதமா் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சௌத்ரி கூறியிருப்பதாவது, சமீபத்தில், எதிரியான இந்தியா மூன்று இடங்களில் கோழைத்தனமான வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
இந்த கோழைத்தனமான மற்றும் வெட்கக்கேடான தாக்குதல் இந்தியாவின் வான்வெளியில் இருந்து நடத்தப்பட்டது.
அவர்கள் பாகிஸ்தானின் வான்வெளிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் இதற்கு பதிலடி கொடுக்கும் என்பதை திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகிறேன் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது “துல்லியமான தாக்குதல்” நடத்தியதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாகிஸ்தானில் உள்ள மூன்று இடங்களில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் இராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் உள்ள பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் ஒரு ஏவுகணை பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் உள்ள முசாபராபாத்தில் உள்ள பழைய விமான நிலையத்தை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் (Pahalgam) தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா (India) மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா இராணுவத் தாக்குதல்களைத் திட்டமிடுவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக ரஷ்யாவுக்கான பாகிஸ்தானின் உயர்மட்ட தூதுவர் காலித் ஜமாலி தெரிவித்திருந்தார்.
இந்தியாவால் அவ்வாறானதொரு தாக்குதல் நடத்தப்பட்டால் அணு ஆயுதங்கள் உட்பட முழு இராணுவ ஆயுதங்களையும் பாகிஸ்தான் பயன்படுத்த நேரிடும் என அவர் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளமையானது பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலையை உருவாகியுள்ளது.