மெக்சிகோவில் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்ஸூம், டிரக்கும் மோதிக் கொண்ட விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
மத்திய மெக்சிகோவின் பூப்லா – ஒக்ஸாகா தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அதே சாலையின் எதிரே சிமெண்ட் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. லாரியானது மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிர்பாராத விதாம எதிரே வந்த பஸ் மீது மோதியது. இதனையடுத்து மற்றொரு வேன் மீதும் நேருக்கு நேர் மோதியது. இந்த மோதல்களுக்குப் பிறகு லாரி ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் அதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மெக்சிகோவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெக்சிகோவில் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. அலட்சியமாக வாகனங்களை ஓட்டுவது, டிரைவரின் சோர்வு காரணமாக சரக்கு லாரிகள் விபத்தில் சிக்குவது கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரையில் காம்பேச் மற்றும் பிற பகுதிகளில் மட்டும் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, சாலை விபத்துக்களை தடுக்க கடுமையான விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.