முள்ளிவாய்க்கால் 16ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரால் இன்று (19.05.2025) லண்டனில் நினைவு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் திரண்டனர். கொட்டொலிகளுடன் ஆரம்பமான நீதிக்கான போராட்டம், பேரணியாக வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பிரதமர் இல்லம் வரை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பிரித்தானிய தேசியக்கொடியை டொமிபில்லா ராஜநாயகம் ஏற்றி வைத்தார். தமிழீழ தேசியக்கொடியை யாதவி தயாளபவன் ஏற்றிவைத்தார். மேனகா சுரேஷ் நினைவு சுடரினை ஏற்றிவைத்தார்.
இதனையடுத்து நினைவுதூபிக்கு யதுசன் ஜெயக்குமார் மலர் மாலை அணிவித்தார். தொடர்ந்து நினைவு தூபிக்கு மலர் வணக்கமும் தீபவணக்கமும் இடம்பெற்றன.
நிகழ்வில் கவிதைகள், உரைகளும், முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் பகிர்வுகளும் இடம்பெற்றன. இறுதியாக, கலந்து கொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.


