ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அரபு நாடுகள், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட ஈரானிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
ஈரானில் இன்று இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இஸ்லாமிய புரட்சிப்படை கமாண்டர், விமான பாதுகாப்பு படை கமாண்டர் அமிர் அலி ஹஜிஹாதே உட்பட 20 க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி கூறுகையில், இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கை அமைதியை அழிப்பதுடன், சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும் என்றார்.
கத்தார் வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறியது. அந்நாடு கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளது.
ஐக்கிய அரபு எமீரேட்சும், இஸ்ரேலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்ததுடன், பதற்றம் மேலும் அதிகரிக்காமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டியது முக்கியம் எனத் தெரிவித்து உள்ளது.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எகிப்து, இஸ்ரேலின் செயலால் மத்திய கிழக்கின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் முன்னெப்போதும் இல்லாத விளைவுகள் ஏற்படக்கூடும் எனத்தெரிவித்து உள்ளது.
இதனிடையே இஸ்ரேலின் அரசியல் விமர்சகராக அறியப்படும் ஒரி கோல்ட்பெர்க் கூறுகையில், இஸ்ரேலின் இந்த தாக்குதல் மூலம் காசா பகுதி உலகின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும். காசா மனிதாபிமான தொண்டு நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்படும். இந்த தாக்குதலால் சர்வதேச கவனம் காசாவில் இருந்து திரும்பும் என்றார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் மற்றும் ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஜ் ஆகியோர், இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தினர்.
ஏவுகணைகள் அழிப்புதரையில் இருந்து தரையில் உள்ள இலக்குகளை தாக்கும் ஈரானின் ஆயுத அமைப்பை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
ராக்கெட் லாஞ்சர்கள், ஏவுகணைகளை வைக்கும் இடங்கள் மற்றும் ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளது.
இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து, ஐ.நா., பாதுகாப்பு சபையில் ஈரான் புகார் தெரிவித்து உள்ளது. மோதல் தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு சபை விரைவில் கூடி ஆலோசனை நடத்த உள்ளது.
ஈரான் , ஈராக், சிரியா மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கான விமான பயணங்களை துருக்கி ரத்து செய்துள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என தனது குடிமக்களை கேட்டுக் கொண்டு உள்ளது.