News

ஈரான் தலைவர் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் – டிரம்ப் மிரட்டல்

 

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஈரான் வான்வெளி உள்ளதாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாதியிலேயே வெளியேறினார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் கரோலின் லீவிட் வெளியிட்ட பதிவில், “ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் கியெர் ஸ்டார்மருடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் கைழுத்திட்டு உடனடியாக வெளியேறினார். மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தால், உச்சிமாநாட்டு பயணத்தை முடித்துவிட்டு இன்றிரவே வெள்ளை மாளிகை திரும்ப உள்ளார்” என்று தெரிவித்திருந்தார்.

கனடா பயணத்தை பாதியில் முடித்துவிட்டு திரும்புவதற்கு முன்னதாக, ட்ரூத் சோஷியல் இணையதளப் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டிருந்த பதிவில், “நான் கையெழுத்துப் போடக் கூறியிருந்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்துயிட்டு இருக்க வேண்டும். ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது வெட்கக் கேடானது. இதனால், மனித வாழ்க்கைதான் வீணாகிறது. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறியிருந்தார்.

இந்த சூழலில் அமெரிக்கா திரும்பிய ஜனாதிபதி டிரம்ப், வெள்ளை மாளிகையில் உள்ள அவசரகால அறையில், தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களை தயாராக இருக்க உத்தரவிட்டிருந்தார். இதனிடையே, ஈரானை அமெரிக்காவும் தாக்க வேண்டும் என்று இஸ்ரேல் கோரிக்கை வைத்து வருகின்றது. இந்த நிலையில், அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலை தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதன்படி அமெரிக்காவின் பங்கர் – பஸ்டர் குண்டுகளைக் கொண்டு ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்கி அழிக்கும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் புரட்சி படை தளபதி உசைன் சலாமி மற்றும் அணு விஞ்ஞானி பெரேதூன் அப்பாஸி உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா மற்றும் ரெஹோவோத் உள்ளிட்ட நகரங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில், ஈரானின் ஏவுகணை கிடங்கில் 3-ல் ஒரு பகுதி அழிக்கப்பட்டு விட்டது என தெரிவித்தது.

இந்த சூழலில், ஈரான் நாட்டின் மத்திய டெஹ்ரானில் நடந்த வான்வெளி தாக்குதலில், மிக மூத்த ராணுவ தளபதியான மேஜர் ஜெனரல் அலி ஷாத்மனி என்பவரை படுகொலை செய்து விட்டோம் என்று இஸ்ரேல் இன்று தெரிவித்தது. கடந்த 13-ந்தேதி நடந்த தாக்குதலில் மேஜர் ஜெனரல் குலாம் அலி ரஷீத் மரணம் அடைந்த நிலையில், அவருக்கு பதிலாக ஷாத்மனி அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவர் பதவிக்கு வந்த ஒரு சில நாட்களில் இஸ்ரேல் தாக்குதலில் பலியாகி உள்ளார். இது உளவு பிரிவு தலைமையிலான துல்லிய தாக்குதல் என இஸ்ரேல் தெரிவித்தது.

5 நாட்களில் 2-வது முறையாக, ஈரானின் போர்க்கால தலைமை தளபதியை இஸ்ரேல் பாதுகாப்பு படை அழித்து விட்டது என அதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. ஷாத்மனி, ஈரான் தலைவர் அயோத்துல்லா அலி காமினியின் நெருங்கிய ராணுவ ஆலோசகர் மற்றும் புரட்சி படைகள், ஆயுத படைகள் ஆகியவற்றின் தளபதியாகவும் செயல்பட்டு வந்துள்ளார். எனினும், ஷாத்மனி உயிரிழந்த தகவலை ஈரானின் அரசு ஊடகம் உறுதி செய்யவில்லை.

5 நாட்களில் 2-வது முறையாக, ஈரானின் போர்க்கால தலைமை தளபதியை இஸ்ரேல் பாதுகாப்பு படை அழித்து விட்டது என அதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. ஷாத்மனி, ஈரான் தலைவர் அயோத்துல்லா அலி காமினியின் நெருங்கிய ராணுவ ஆலோசகர் மற்றும் புரட்சி படைகள், ஆயுத படைகள் ஆகியவற்றின் தளபதியாகவும் செயல்பட்டு வந்துள்ளார். எனினும், ஷாத்மனி உயிரிழந்த தகவலை ஈரானின் அரசு ஊடகம் உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் ஈரான் உச்ச தலைவர் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் இணையதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஈரானின் “உச்ச தலைவர்” என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் ஒரு எளிதான இலக்கு, ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை வெளியே கொண்டுவரப் போவதில்லை (கொல்லப் போவதில்லை!), குறைந்தபட்சம் இப்போதைக்கு அது நடக்காது. ஆனால் பொதுமக்கள் மற்றும் அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!

ஈரானின் வான்வெளி எங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்கள் வந்துள்ளது. ஈரானிடம் நல்ல ஸ்கை டிராக்கர்கள் மற்றும் பிற தற்காப்பு உபகரணங்கள் ஏராளமாக இருந்தன, ஆனால் அது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, “பொருட்களுடன்” ஒப்பிட முடியாது. அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்களைவிட ஈரானின் ஆயுதங்கள் சிறப்பாக செயல்படவில்லை.இவ்வாறு அதில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top