பிரதமர் பதவி விலக வேண்டும் என கோஷம் எழுப்பியதுடன், புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஸ்பெயின் நாட்டில் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியை சேர்ந்த பெட்ரோ சாஞ்சஸ் பிரதமராக உள்ளார். சாஞ்சஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் அவருடைய மனைவி, குடும்பத்தினர் என பலரும் ஊழலில் ஈடுபடுகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்தது. இதில், அவருடைய சகோதரர் ஒருவரும் சமீபத்தில் சிக்கினார்.
இதுபற்றி வரிசையாக வழக்குகளும் விசாரணை நிலையில் உள்ளன. இதனால், பிரதமருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அவருடைய அமைச்சரவையின் முன்னாள் உறுப்பினருக்கும் இதில் தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது.
இதனையடுத்து, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான பாப்புலர் கட்சி சார்பில் மாட்ரிட் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பேரணியாக சென்றனர். அப்போது, அவர்கள் பிரதமர் பதவி விலக வேண்டும் என கோஷம் எழுப்பியதுடன், புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அவர்கள் பேரணியாக சென்றபோது, மாபியா கும்பல் அல்லது ஜனநாயகம் என்ற வாசகம் கொண்ட பேனரை சுமந்தபடி சென்றனர். ஆளும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடியும் சென்றனர். இந்த பேரணியில், 50 ஆயிரம் பேர் திரளாக கலந்து கொண்டனர் என தகவல் தெரிவிக்கின்றது.