அஹமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 40 வயதுடைய விஷ்வாஸ் குமார் ரமேஷ் உயிர் தப்பியுள்ளார்.
அவர் இந்த விமானத்தில் 11A எண் இருக்கையில் பயணித்துள்ளார்.
விமானம் புறப்பட்ட 30 விநாடிகளுக்குள் வெடிப்பு ஒலி கேட்டதாகவும், பின்னர் விமானம் தரையில் விழுந்து சிதைந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
விஷ்வாஸ், லண்டனில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவரது மனைவி மற்றும் மகனும் அங்கேயே இருக்கின்றனர்.
அவர் தனது 45 வயதான சகோதரன் அஜய் குமாருடன் (Ajay Kumar Ramesh) இந்தியாவிலிருந்து லண்டன் செல்லும்போது இந்த சம்பவம் நடந்தது.
விமானத்தில் அஜய் வேறு இருக்கை வரிசையில் இருந்ததாகவும், விபத்துக்குப் பிறகு அவர் காணாமற்போனதாகவும் கூறிய விஷ்வாஸ், “தயவுசெய்து என் அண்ணனை தேட உதவுங்கள்,” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
AI171 என்ற விமானம், பிரித்தானியா, இந்தியா, கனடா மற்றும் போர்ச்சுகீஸ் பிரஜைகள் உட்பட 242 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்பட்ட ஐந்து நிமிடங்களில், அஹமதாபாத்தின் மேகனி நகரில் விபத்துக்குள்ளானது. விமானம் பூமியில் வீழ்ந்து தீப்பிடித்து சிதைந்தது.
அசர்வா சிவில் மருத்துவமனையில் பலரும் தங்கள் உறவினர்களைக் காண விரைந்துள்ளனர். இந்த விமானத்தில் பயணித்ததாக கூறப்படும் முன்னாள் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியும் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.