News

காசாவில் உதவிக்கு காத்திருந்தவர்கள் மீண்டும் இலக்கு: மேலும் 25 பேர் பலி

 

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் நேற்;றுக் காலை மேலும் 25 பேர் கொல்லப்பட்டதோடு இவர்களில் 15 பேர் உதவி விநியோக இடத்திற்கு அருகே பலியாகி இருப்பதாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய காசாவின் நட்சரிம் தாழ்வாரத்தில் உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேலியப் படை நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டு மேலும் 60 பேர் வரை காயமடைந்ததாக சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் அதிகாரி மொஹமது அல் முகையிர் தெரிவித்துள்ளார். இந்த உதவி விநியோக இடத்தில் உதவிக்காக ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி ஒன்றுதிரள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவில் வழங்கப்படும் உதவியை பெறும் எதிர்பார்ப்புடன் இரவு முழுவதும் மக்கள் காத்திருந்ததாக சம்பவத்தை பார்த்த சம் அபூ ஷார் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

‘அதிகாலை 1.00 மணி அளவில் அவர்கள் எம்மீது சூடு நடத்த ஆரம்பித்தார்கள். டாங்கிகள், விமானம் மற்றும் ஹெலிகளில் இருந்து சூடு தீவிரமாக இருந்தது’ என்று அவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி ஊடாக தெரிவித்தார்;. சுஹதா சந்தியில் பெரும் எண்ணிக்கையான மக்கள் திரண்டிருந்ததால் இந்த தாக்குதலுக்கு மத்தியில் மக்களால் தப்பி ஓட முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறினார்.

இதில் காயமடைந்தவர்கள் வடக்கு மற்றும் மத்திய காசாவில் இருக்கும் முறையே அல் அவ்தா மற்றும் அல் அக்ஸ் வைத்தியசாலைகளுக்கு அழைத்துவரப்பட்டதாக முகையிர் கூறினார்.

காசாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் உதவிகள் செல்வதை முடக்கி வரும் நிலையில் அங்கு பஞ்சம் போன்ற நிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா. நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய இந்த உதவி விநியோக இடங்களில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தவிர இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவின் மற்ற பகுதிகளில் மேலும் 10 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்தது. இதில் காசா குடியிருப்பு கட்டடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டிருப்பதோடு மேற்கே அல் ஷாட்டி அகதி முகாமில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் மேலும் எழுவர் பலியாகியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top