பட்டினியிலுள்ள காசா மக்கள் உதவி பெறுவதற்காக கடந்த சனிக்கிழமை ஒன்று திரண்டபோதும் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பார்த்தவர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இந்த உதவி விநியோகத் தளத்தை நோக்கி மக்கள் முன்னேறி வந்தபோதே இஸ்ரேலிய படையினர் சூடு நடத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அச்சுறுத்தும் வகையில் தம்மை நெருங்கி வந்தவர்கள் மீது எச்சரிக்கும் நோக்கில் சூடு நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இந்த உதவி விநியோகத் தளத்தை நோக்கி திரண்ட மக்கள் மீது கடந்த ஒரு வாரத்திற்கு மேலான காலத்தில் இஸ்ரேல் இராணுவம் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களில் 100க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்த உதவி விநியோகத் தளம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவிலான காசா மனிதாபிமான நிறுவனம் என்ற அமைப்பால் நடத்தப்படுகிறது. ஐ.நா மற்றும் பிராதான தொண்டு அமைப்புகளால் நிராகரிக்கப்பட்ட இந்த உதவி விநியோகத் தளத்திற்கு அதிகமான கூட்டம் திரள்வது மற்றும் தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்களை அடுத்து கடந்த வாரம் உதவி விநியோகங்கள் நிறுத்தப்பட்டன.
இதன்படி கடந்த புதன்கிழமை (4) நிறுத்தப்பட்டு நேற்று வரை ஆரம்பிக்கப்படாமல் இருந்தபோதும் எந்த வகையான உதவியும் கிடைக்காமல் பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தத் தளத்தில் தினசரி திரண்டு வருகின்றனர். இதில் இஸ்ரேலின் இராணுவ வலயத்திற்கு அருகால் கடந்து சென்றே மக்கள் இந்த உதவி விநியோகத் தளத்தை அடைய முடியுமாக உள்ளது.
இந்த இடம் போர் வலயமாக உள்ளது என்று இஸ்ரேல் இராணுவம் முன்னதாக எச்சரித்திருந்தது.
இந்நிலையில் இஸ்ரேலிய டாங்கிகள் தம்மை நோக்கி சூடு நடத்தியதாக கடந்த சனிக்கிழமை தாக்குதலில் காயமடைந்து நாசர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் 30 வயது ஆதம் தஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
‘எமக்கு எவ்வாறு தப்புவது என்று தெரியவில்லை. இது உதவி அன்றி எமக்கான பொறி ஒன்றாகவே உள்ளது’ என்று அவர் ஏ.பி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தைப் பார்த்த மற்றொருவரான சாஹித் பென் ஹசன் என்பவர், தனக்கு பக்கத்தில் இருப்பவரின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். தாமும் மற்றவர்களும் உடல்களை அங்கிருந்து அகற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு தப்பிவர முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
‘காலை 6 தொடக்கம் மாலை 6 மணி வரை அந்த இடம் பாதுகாப்பானது என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். என்றாலும் அவர்கள் ஏன் எம் மீது சூடு நடத்த ஆரம்பித்தார்கள்?’ என்று ஏ.பி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்ட அவர், ‘வெளிச்சம் வந்ததும் அவர்களின் கெமராக்களுக்கு தெளிவாக எம்மை பார்க்க முடியுமாக உள்ளது’ என்றும் சுட்டிக்காட்டினார்.
காசாவுக்கான உதவி விநியோகத்தை இஸ்ரேல் கடந்த மார்ச் 2 ஆம் திகதி தொடக்கம் முழுமையாக முடக்கி உள்ளது. இதனால் அங்கு உணவு, மருந்து மற்றும் அனைத்தும் தீர்ந்து பாரிய மனிதாபிமான நெருக்கடி ஒன்று உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் நேற்று காலையில் இடம்பெற்ற தாக்குதல்களில் காசாவெங்கும் 21 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
தெற்கு காசாவில் கான் யூனிஸ் நகரின் அல் மவாசி பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் கூடாரம் ஒன்றின் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதல் ஒன்றில் இரு சிறுவர்கள் உட்பட ஐவர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கான் யூனிஸில் இஸ்ரேலின் முந்தை தாக்குதல் ஒன்றில் படுகாயம் அடைந்த இளம் பெண் ஒருவரும் நேற்று உயிரிழந்ததாக அந்த செய்தி நிறுவனம் கூறியது.
இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்களை உக்கிரப்படுத்தி இருக்கும் அதேநேரம் வடக்கு காசாவின் ஜபலியா நகரில் இருக்கும் குடியிருப்பாளர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் கட்டுமானங்களை இடித்து தகர்த்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 75 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டிருந்தது. இதில் குடியிருப்புக் கட்டடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஒரு முழு அளவிலான படுகொலைச் செயல் என்று பலஸ்தீன சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் பேச்சாளர் மஹ்மூத் பசல் குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இன்றி காசா நகரின் சப்ரா பகுதியில் இருந்த வீட்டின் மீது இஸ்ரேல் குண்டு வீசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் இருப்பதோடு மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘இது முழு அளவிலான ஒரு படுகொலைச் செயல். அந்தக் கட்டடத்தில் பொதுமக்கள் மாத்திரமே இருந்தார்கள்’ என்று பசல் குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் உள்ள மக்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் நிலையிலேயே இஸ்ரேலின் தாக்குதல்கள் எந்தத் தணிவும் இன்று தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன