ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதல்களில் இதுவரை சுமார் 860 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதைத்தொடர்ந்து காசா முனையில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. சுமார் 21 மாதங்களாக காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை மொத்தம் 56,077 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதல்களில் இதுவரை சுமார் 860 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 7 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.