காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளில் தன்னால் முன்னேற்றத்தை அவதானிக்கமுடிவதாக அந்த அலுவலக அதிகாரிகளிடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகைதந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் நீதி அமைச்சு, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியவற்றின் அதிகாரிகளை செவ்வாய்க்கிழமை (24) வெளிவிவகார அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின்போது உயர்ஸ்தானிகருக்கும் அரச கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் உள்ளக நல்லிணக்க செயன்முறை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியவற்றின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளிடம் வினவிய உயர்ஸ்தானிகர், குறிப்பாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதன் செயற்பாடுகளை செயற்திறன்மிக்கவகையில் முன்னெடுப்பதற்கு சர்வதேச சமூகம் எவ்வாறான உதவிகளை வழங்கமுடியும் என்றும் கேட்டறிந்தார்.
அதற்குப் பதிலளித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள், அலுவலகத்தின் செயற்பாடுகள் மற்றும் தேவைப்பாடுகள் பற்றி தம்மால் மதிப்பீட்டு அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டதாகவும், அதிலுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான உதவிகளை வழங்குமாறும் வேண்டுகோள்விடுத்தனர்.
அதேவேளை செம்மணி உள்ளடங்கலாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் குறித்து உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்த அதிகாரிகள், அம்மனிதப்புதைகுழிகளில் கண்டறியப்படும் மனித எச்சங்கள் தொடர்பில் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு ஏற்றவாறான தடயவியல் விஞ்ஞான ஆய்வுகூடமொன்றை நாட்டில் நிறுவுவது பெரிதும் பயனுடையதாக அமையும் எனவும் சுட்டிக்காட்டினர்.
அதனை செவிமடுத்த உயர்ஸ்தானிகர் ஆய்வுகூடத்தை நிறுவுதல் என்பது சாதகமான முறையில் பரிசீலிக்கப்படவேண்டிய விடயமாகும் எனக் குறிப்பிட்டதுடன் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளில் தன்னால் முன்னேற்றத்தை அவதானிக்கமுடிவதாகவும் தெரிவித்தார்.