அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய ‘ஏர் இந்தியா’ விமானத்தில் 242 பேர் இருந்துள்ளனர்.
இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் போயிங் 787-8 டிரீம்லைனர் விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர்.
விமானத்தில் இருந்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை சேர்ந்தவர் ஒருவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள் என ‘ஏர் இந்தியா’ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், விமான விபத்தை தொடர்ந்து ‘ஏர் இந்தியா’ நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்து வேதனையளிக்கிறது.
இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். உங்கள் வலியை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். இந்த துயரமான தருணத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இந்திய மக்களுடன் ஒற்றுமையாக நிற்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.