News

சர்வதேச மேற்பார்வையில் செம்மணி புதைகுழி அகழ்வு – விடுக்கப்பட்ட கோரிக்கை

யாழ். (Jaffna) செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கை சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழ். நகர நுழைவாயில் – நாவற்குழி பகுதியில் நாளை (05.06.2025) வியாழன் காலை 10 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், அரியாலை – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான பகுதியில் இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் நாள் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.

அரியாலை – செம்மணி சித்துபாத்தி மாயானத்தில் எழு மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது.

புதைகுழியில் சிறுவர்கள், பெண்கள் என அதிக மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என்று அஞ்சப்படுகின்றது.

செம்மணி – சித்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித என்புச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

இதன்போது, மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கான் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு இரண்டு உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது.

குறித்த அகழ்வு பணிகள் நேற்று முன்தினம் மீண்டும் ஆரம்பமான நிலையில் குறித்த பகுதியில் மேலும் ஐந்து மனித உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் தொடர்ந்து வரும் நாட்களில் அகழ்வு பணிகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top