சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டதில், தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானின், கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்தச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், ஏராளமான தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து சம்பவம் சூடானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு தரமற்ற பாதுகாப்பு நடைமுறைகளால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதேபோன்ற சம்பவங்களில் 2023ம் ஆண்டு 14 சுரங்கத் தொழிலாளர்களும், 2021ம் ஆண்டு 38 சுரங்க தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.