பாகிஸ்தானில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அந்நாட்டில் கடந்த 26ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கைபர் – பக்துவா, சிந்து, பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி ஏற்கனவே 18 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அந்நாட்டில் பெய்துவரும் கனமழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 63 பேர் படுகாயமடைந்துள்ளனர். கனமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மீட்புக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.