News

அமெரிக்காவில் விமானத்தில் தீ-பயணிகள் தப்பினர்

 

ஓடுபாதையில் தரையிறங்கிய போது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரத்தில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 07:49 மணிக்கு (இந்திய நேரம்)அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் டயர் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மியாமிக்கு புறப்படவிருந்த இந்த விமானம் புறப்படுவதற்கு முன்பே உடனடியாக நிறுத்தப்பட்டது. விமானம் புறப்படும் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

விமானத்தில் மொத்தம் 173 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். இந்த சம்பவத்தில் ஒரு பயணிக்கு லேசான காயம் ஏற்பட்டது. சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவில், விமானத்தில் இருந்து புகை வெளியேறுவதை காண முடிகிறது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். எங்கள் பராமரிப்பு குழு விமானத்தை ஆய்வு செய்து வருகிறது. பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவில், பயணிகள் அவசர கால வழிகளை பயன்படுத்தி விமானத்தை விட்டு வெளியேறுகின்றனர். மேலும், விமானத்தின் இடது பின்புறத்தில் இருந்து புகை வெளியேறுவது தெளிவாக தெரிகிறது. விமான நிறுவனத்தின் தகவலின்படி, அனைத்து பயணிகளுக்கும் மாற்று விமானத்தில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காயம் அடைந்த பயணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top