படுகாயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டிராவர்சி நகரில் வால்மார்ட் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், வால்மார்ட் வணிக வளாகத்திற்குள் இன்று நுழைந்த நபர் தான் வைத்திருந்த கத்தியை கொண்டு அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதனால், வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓடினர்.
இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 11 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். தாக்குதல் நடத்திய நபரின் பெயர் உள்ளிட்ட விவரத்தை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.