உலகின் மனச்சாட்சியை உலுக்கும் உணர்வுசார்ந்த படுகொலை அடையாளமான செம்மணி மனிதப் புதைகுழியோடு, மன்னார், கொக்குத்தொடுவாய், திருக்கேதீஸ்வரம், மண்டைதீவு உள்ளிட்ட மனிதப்புதைகுழிகள் தொடர்பிலும் முறையான நீதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறுகையில்,
“செம்மணி சித்துப்பாத்தி மயானப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் நேற்றுவரை 52 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அகழப்படும் பகுதிகளிலிருந்து மழைநீரை வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட கால்வாய்களில் கூட மூன்று இடங்களில் என்புச் சிதிலங்கள் தென்பட்டுள்ளன என்றால் இனப்படுகொலைக்கான வலுவான சாட்சியமாக அந்த மனிதப் புதைகுழியை அடையாளப்படுத்த முடியும்.
ஆனால் எழுபது ஆண்டு காலமாக தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி விசாரணையை சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியோடு நிறுத்திக்கொள்ள இந்த அரசாங்கமும் தன்னாலான பிரயத்தனங்களை முன்னெடுக்கக்கூடும் என்ற அடிப்படையில், இன அழிப்புக்கான பொறுப்புக்கூறலும் பரிகார நீதியும் பரந்துபட்ட அளவில் அணுகப்பட வேண்டும் என்பதில் நாமும், நீதியை நாடும் எல்லாத் தரப்புகளும் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.