காசாவில் உதவி மையங்கள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில், மே மாதம் முதல் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா., தகவல் தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. காசாவில் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக காசாவில் உதவி மையங்களில் இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. உதவி மையங்கள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இஸ்ரேல் படையினர் தாக்குதலில், மே மாதம் முதல் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து, ஐ.நா செய்தித் தொடர்பாளர் ரவினா ஷம்தாசானி கூறியதாவது: மே மாத இறுதியில் இருந்து காசாவில் உள்ள உதவி மையங்களிலிருந்து உணவு பெற முயன்றபோது பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஜூலை 7ம் தேதி வரை, நாங்கள் இதுவரை 798 கொலைகளைப் பதிவு செய்துள்ளோம்.
அவற்றில் 615 பேர் உதவி மையங்களில் உணவு பெற முயன்ற போது கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் 183 பேர் உதவி மையங்கள் அருகில் உள்ள பகுதிகளில் கொல்லப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
அக்டோபர் 7ம் தேதி, 2023ம் ஆண்டு முதல் இந்தப் போரில், காசாவில் 57,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.