News

தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் புதன்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.

நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இன அழிப்புகளில் ஒன்றான கறுப்பு ஜூலையை நினைவு கூறும் முகமாக பொது நினைவேந்தல் நிகழ்வு இன்று (23.07.2025) மாலை திருகோணமலை கடற்கரையில் உள்ள வெளிக்கடை தியாகிகள் அரங்கில் இடம் பெற்றது.

குறித்த நினைவேந்தலை ஈகை சுடரேற்றி உணர்வு பூர்வமாக நினைவேந்தினர் இதன் போது இதில் கலந்து கொண்டவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

1983 களில் தமிழர்களுடை வாழ்வியலை அளித்த ஜூலை கலவரம் தமிழர்களுடைய பரப்பில் காணப்படுகிறது.

 

தமிழர்களுடைய வாழ்வியல் பரப்பில் குறிப்பாக ஈழத் தமிழர்கள் தங்களுடைய வாழ்வை அலங்கோலமாக்கி அலைந்து திரிந்து உடமைகளை உயிரை இழந்து புலம்பெயர் தேசங்களுக்கு கூடுதலான தமிழர்கள் இடம் பெயர்ந்து தமிழர்கள் தங்களுடைய வாழ்விடங்களை இழந்து அல்லோல கல்லோலப்பட்ட நாள் ஒன்றினை இன்னுமொரு யுகத்துக்கும் சந்ததிக்கும் நினைவுபடுத்தி கடத்திச் செல்கின்ற அந்த நிகழ்வை திருகோணமலையில் இங்கு செய்கின்றோம்.

இந்த நாள் தமிழர்களுடைய ஒரு கரி நாளாக தமிழர்களுடைய வாழ்வில் இனப்படுகொலையின் ஆரம்ப நாளாக இதனை பார்க்கின்றோம்.

தமிழர்களுடைய வாழ்வியல் பரப்பில் பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளன ஜூலை 23 தொடங்கிய கலவரம் அதற்கு பின்னர் பல்வேறு நாட்கள் இடம் பெற்று தமிழர்களை சிதலம் சிதலமாக பாலம் பாலமாக அவர்களுடைம பண்பாட்டியலையும் வாழ்வியலையும் கூறு போட்ட நிகழ்வாக திருகோணமலை நண்பர்கள் வட்டம் சார்பாக நினைவு கூறுகிறோம்.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் வவுனியாவில் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா மாநகரசபை முன்றலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபி முன்பாக கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சு.தவபாலன் தலைமையில் இந்நிகழ்வு இன்று (23.07) இடம்பெற்றது.

இதன்போது படுகொலையின் போது மரணித்த உறவுகளுக்காக கறுப்பு யூலை படுகொலை பதாதைக்கு தீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், கறுப்பு யூலை படுகொலை தொடர்பில் கருத்துரைகளும் இடம்பெற்றன.

 

இந்நிகழ்வில் வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், வவுனியா மாநகர சபை உறுப்பினர் தர்மரட்ணம், வவுனியா வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் சஞ்சுதன் உட்பட கட்சியின் ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top