ஆசியாவில் அமைந்துள்ள தாய்லாந்து உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலங்களை கொண்டுள்ளது. இந்நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள பங்சு மாவட்டம் சடுசங் பகுதியில் காய்கறி சந்தை உள்ளது.
இந்நிலையில், இந்த சந்தைப்பகுதிக்கு இன்று துப்பாக்கியுடன் வந்த நபர் அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காவலளர்களை சரமாரியாக சுட்டார். மேலும், அங்கிருந்த ஒரு பெண்ணையும் சுட்டார். இந்த சம்பவத்தில் காவலர்கள் 4 பேர், ஒரு பெண் என 5 பேர் உயிரிழந்தனர். இதன்பின்னர், துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர் யார்? துப்பாக்கி சூட்டிற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையே எல்லை விவகாரத்தில் கடந்த சில நாட்களாக மோதல் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.