தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இரு நாட்டுத் தலைவர்களும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை தனது ட்ரூத் சமூக தள பதிவில் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்து (Thailand), கம்போடியா இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த போரில் இருதரப்பில் இதுவரை 33 பேர் உயிரிழந்து உள்ளதுடன் கிட்டத்தட்ட 200,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறான பதட்ட நிலையில், இரு தரப்பினரும் உடனடி போர் நிறுத்தத்தையும் அமைதியையும் நாடுவதாகவும், அவர்கள் உடனடியாக போர் நிறுத்தத்தில் ஈடுபடாவிட்டால் அவர்களுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபடப் போவதில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கம்போடியா பிரதமர் மற்றும் தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமருடனான தனது கலந்துரையாடலின் போது, இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கான தீர்வுகளைத் தேடுவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தும் கம்போடியாவும் நீண்ட வரலாறு மற்றும் கலாச்சாரத்தைக் கொண்ட இரண்டு நாடுகள் என்றும், எனவே அவர்கள் பல ஆண்டுகளுக்கு ஒத்துழைப்புடன் செயற்பாடுவார்கள் என்றும் நம்புவதாக டொனால்ட் டிரம்ப் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.