News

ரஷ்யாவுக்கு எதிராக திரும்பிய ட்ரம்பின் சீற்றம்.. அதிரடியாக விதிக்கப்பட்ட கடும் நிபந்தனை!

ரஷ்யா, உக்ரைனுடன் இன்னும் 50 நாட்களுக்குள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இணங்காவிட்டால், 100 வீத மிகக் கடுமையான இரண்டாம் நிலை வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ட்ரம்ப், ரஷ்யா மீது மிக மிக அதிருப்தி அடைந்துள்ளதனால் நேட்டோ வழியாக உக்ரைனுக்கு அதி உயர் ரக ஆயுதங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதர், திங்களன்று கியேவில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்தார்.

இந்நிலையில், மூன்று ஆண்டுகாலப் போர் குறித்த ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கையில் சாத்தியமான மாற்றம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.

போரை விரைவாக நிறுத்துவதை தனது இராஜதந்திர முன்னுரிமைகளில் ஒன்றாக ட்ரம்ப் முன்னிலைபடுத்தியுள்ளதுடன், அமெரிக்கா தலைமையிலான அமைதி முயற்சிகளில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அசைக்க முடியாத நிலைப்பாடு குறித்து அவர் அதிகரித்து வரும் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ட்ரம்ப், நீண்ட காலமாக புடினுடனான தனது நட்புறவைப் பற்றி பெருமையாகக் கூறி வருகிறார், ஜனவரியில் பதவியேற்ற பிறகு, ரஷ்யா உக்ரைனை விட அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அதிக விருப்பம் கொண்டுள்ளதாக மீண்டும் மீண்டும் கூறினார். அதே நேரத்தில், ட்ரம்ப், ஜெலென்ஸ்கி போரை நீட்டிப்பதாக குற்றம் சாட்டினார்.

மேலும் அவரை தேர்தல்கள் இல்லாத சர்வாதிகாரி என்றும் அழைத்தார். ஆனால் உக்ரைனின் பொதுமக்கள் பகுதிகளுக்கு எதிரான ரஷ்யாவின் இடைவிடாத தாக்குதல் ட்ரம்பின் பொறுமையை இழக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top