மும்பையில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானமொன்றின் மூன்று சில்லுகள் வெடித்ததில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மழை காரணமாக ஓடுபாதையை விட்டு விமானம விலகி சென்றபோது இவ்வாறு மூன்று சில்லுகளும் வெடித்துள்ளன.
விமானம் கொச்சியில் இருந்து மும்பை சென்று தரையிறங்கியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஓடுபாதையை தாண்டி விமானம் சென்ற போது சில்லுகள் வெடித்ததால் விமானத்தின் என்ஜினின் சுற்றுத் தகடு சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், விபத்தை தொடர்ந்து, விமானம் தற்போது பரிசோதனைக்காக நிலைத்தடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதென ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
சம்பவத்துக்குப் பிறகு, மும்பை விமான நிலையத்தின் முதன்மை ஓடுபாதை 09/27 சிறிது சேதமடைந்துள்ளதுடன், இரண்டாம் நிலை ஓடுபாதை இயக்கத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மும்பையில் இன்று தொடர்ச்சியான கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக விமான நிலையம் பயணிகளை தங்கள் விமான நிலையை முன்கூட்டியே சரிபார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.