இத்தாலியின் லேம்பெடுசா தீவு அருகே ஆப்ரிக்க அகதிகள் 97 பேரை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில் 20 பேர் பலியாகினர்; 17 பேரை காணவில்லை.
ஐரோப்பிய நாடான இத்தாலியையும், வட ஆப்ரிக்க நாடுகளையும் மத்திய தரைக்கடல் பகுதி இணைக்கிறது. இந்த கடல் பகுதி வழியாக ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான ஆப்ரிக்க மக்கள் அகதிகளாக இத்தாலிக்கு பயணிக்கின்றனர்.
இதற்காக ஆபத்தான படகு பயணங்களை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டில் நேற்று வரை 38,263 பேர் இது போல் இத்தாலி கரையை அடைந்துள்ளனர். மேலும், 675 பேர் படகு கவிழ்ந்த விபத்தில் இறந்து உள்ளனர்.
இந்நிலையில், ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த 97 பயணியருடன் நேற்று படகு ஒன்று இத்தாலிக்கு சட்டவிரோதமாக புறப்பட்டது.
இது லேம் பெடுசா தீவு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒன்றரை வயது குழந்தை உட்பட 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்; 17 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடக்கிறது.