காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேலின் ராணுவ அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்த நிலையில், அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேலுக்கான ஆயுத வினியோகத்தை நிறுத்துவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள தன் அண்டை பகுதியான காசா மீது 2023ல் போர் துவங்கியது. ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நகரங்களுக்குள் புகுந்து 1,200 பேரை கொன்றதே இந்த போருக்கு காரணம்.
காசாவின் 80 சதவீத பகுதி தற்போது இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 20 சதவீத பகுதிகளிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி, தங்கள் வசப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டது.
இந்நிலையில், ஜெர்மனி சான்சிலர் பிரெட்ரிச் மெர்ஸ் கூறுகையில், “காசா நகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்தால் அந்நாட்டுக்கான ராணுவ உபகரணங்களின் ஏற்றுமதியை நிறுத்தி உள்ளோம்.
”இஸ்ரேல் அரசு காசாவின் பொதுமக்களுக்கு உதவி வழங்குவதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். ஐ.நா., அமைப்புகள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,” என்றார்.