சீனாவின் சுற்றுலா நகரமான சான்யாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளன.
சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள சான்யா நகரின் தென்கிழக்கே சுமார் 200 கிமீ (124 மைல்) தொலைவில் ஒரு வெப்பமண்டல புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயலுக்கு ‘கஜிகி’ என பெயரிடப்பட்டுள்ளது. கஜிகி புயல் வடமேற்கு நோக்கி மணிக்கு சுமார் 20 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், அந்த புயல் மேலும் தீவிரமடைந்து காற்றின் வேகம் மணிக்கு 48 கி.மீ. ஆக அதிகரிக்கக் கூடும் என்றும் சீனாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ‘கஜிகி’ புயல் எச்சரிக்கை காரணமாக சீனாவின் சுற்றுலா நகரமான சான்யாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டு, பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. சுமார் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த புயல் வியட்நாமை நோக்கி நகர்வதற்கு முன்பாக சீனாவின் தெற்கு தீவு மாகாணமான ஹைனானின் தெற்கு கடற்கரையில் கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.