காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 85 பே ர் கொல்லப்பட்டனர். அதில், உயிருக்கு பயந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்ற மக்களும் உயிரிழந்தனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 2023ல் திடீர் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல், காசா மீதான தாக்குதலைத் தொடங்கியது.ஹமாஸ் பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என்று இஸ்ரேல் திட்டவட்டமாக கூறி வருகிறது.
இதன்படி, இஸ்ரேல் ராணுவம் காசா நகரை கட்டுப்பாட்டில் எடுக்கும் நோக்கில் தரை வழி தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளது. காசா நகரில், 3,000 ஹமாஸ் பயங்கரவாதிகள் இருப்பதாக இஸ்ரேல் ராணுவத்தினர் சந்தேகிக்கின்றனர். எனவே ஹமாஸ் பயங்கரவாதிகளின் கோட்டை என்று அழைக்கப்படும் இடத்தில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், காசாவின் வடக்குப்பகுதியில் குடியிருப்புகள், நிவாரண முகாமகள், அகதிகளுக்கான டென்ட்கள் மற்றும் மக்களை ஏற்றிச் சென்ற லாரிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்த தாக்குதலில் 76 பேர் கொல்லப்பட்டனர்.
அதற்கு முன்னர், காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையின் டாக்டராக பணியாற்றிய முகமது அபு சல்மியா என்பவரது வீட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் தாக்குதல் நடத்த துவங்கியது முதல், இதுவரை சுகாதார பணியாளர்கள் 1700 பேரை கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளது. 400 பேரை சிறைபிடித்துள்ளதாகவும் குற்றம்சாட்டி உள்ளது.
காசாவில் இருந்து உயிருக்கு பயந்து நகரை விட்டு வெளியேறி சென்றவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் தாக்குதலுக்கு பயந்து காசாவை விட்டு வெளியேறியவர்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருவதாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், மின்சாரம், குடிநீர் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத இடங்களில் டென்ட் அமைத்து தங்கி வருவதாகவும் கூறுகின்றனர்.
இதனிடையே இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அந்நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போரை நிறுத்திவிட்டு, பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினருடன் பேச்சு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் நெருக்கடி கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.