News

சீனாவில் உலகின் மிக உயரமான பாலம் திறப்பு: 2 மணி நேர பயணம் 2 நிமிடமானது

சீனாவிலுள்ள உலகின் மிக உயரமான ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

மூன்று வருடங்களில் கட்டுமான பணிகளை நிறைவு செய்து குய்சோவில் உள்ள மற்றொரு பாலத்தின் பொறியியல் சாதனையை  இந்த பாலம் முறியடித்துள்ளது.

சீனாவின் கரடுமுரடான தெற்கு மாகாணமான குய்சோவில் உள்ள நதி மற்றும் பரந்த பள்ளத்தாக்கின் மேலே 625 மீட்டர் உயரத்தில் ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் அமைந்துள்ளது.

உலகின் இரண்டாவது மிக உயரமான 565 மீட்டர் பெய்பன்ஜியாங் பாலமும் குய்சோவிலேயே உள்ளது.

இந்த பாலம்  திறப்பு நிகழ்வில் திட்ட பொறியாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் உட்பட ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது.

“ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் திறக்கப்படுவதன் மூலம் இரு பகுதிகளுக்கும் இடையிலான பயண நேரம் இரண்டு மணி நேரத்திலிருந்து இரண்டு நிமிடங்களாகக் குறையும்” என மாகாண போக்குவரத்துத் திணைக்களத் தலைவர் ஜாங் யின் கடந்த  24 ஆம் திகதி அன்று தெரிவித்திருந்தார்.

இதன் திறப்பு “பிராந்திய போக்குவரத்துக்கிடையில் மகத்தான முன்னேற்றங்களை ஏற்படுத்துவதோடு,  பிராந்திய பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் புதிய உத்வேகத்தை செலுத்துகிறது” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

சமீபத்திய தசாப்தங்களில் சீனா முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. இது நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கலின் ஒரு காலமாகும்.

மலைப்பாங்கான குய்சோ மாகாணம் ஆயிரக்கணக்கான பாலங்களால் குறுக்காகக் கடக்கப்படுகிறது. உலகின் 100 உயரமான பாலங்களில் கிட்டத்தட்ட பாதி இந்த மாகாணத்தில் இருப்பதாக மாநில செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.

ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் கட்டி முடிக்க மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகியது என சின்ஹுவா தெரிவித்துள்ளது. அதன் 1,420 மீட்டர் பிரதான இடைவெளி இதை “மலைப் பகுதியில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய இடைவெளி பாலம்” ஆக்குகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top